Skip to main content

திரை(மறைவு) அரசியல்

சில ஆண்டுகளுக்கு முன் ஆர்னால்ட் ஸ்வாஸ்னேக்கர் கலிபோர்னியாவின் ஆளுநராகத் தேர்வு செய்யப்பட்டபோது, திரைத்துறையுடன் தொடர்புடையவர்களை, குறிப்பாக நடிகர்களை மட்டுமே அரசின் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கும் இந்தியாவிலுள்ள தமிழ்நாடு என்னும் விசித்திர மாநிலத்தைப் பற்றியக் குறிப்புகள் சில அமெரிக்க இதழ்களில் இடம்பெற்றிருந்தன. அந்த அளவுக்கு தமிழ்நாட்டின் திரைத்துறைக்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்பு நன்கு அறியபட்டதாக இருக்கிறது. அண்டை மாநிலத்தவர்களுக்கு இது தமிழர்களை ஒட்டுமொத்தமாக மட்டம் தட்டுவதற்கு பயன்படும் ஒரு பேசுபொருள். திரைப்பட நடிகர்களுக்கு தமிழக அரசியலில் கிடைக்கும் வரவேற்பு மற்றும் வெற்றிக்கு பின்னால் பல்வேறு விதமான காரணங்கள் இருந்தாலும் இது குறித்து மேலோட்டமான புரிதல் உள்ளவர்கள் ஒரே ஒரு காரணத்தை மட்டுமே முன்வைக்கிறார்கள். பாமரத் தமிழர்களுக்கு திரையில் தெரியும் பிம்பத்தையும் நிஜ வாழ்வையும் வேறுபடுத்திப் பார்க்கும் பக்குவம் இல்லை என்பதே அது.

மேலே சொல்லப்பட்டிருக்கும் காரணத்தில் சிறிது உண்மை இருந்தாலும் தமிழக அரசியல் களத்தில் திரைப்பட நடிகர்களுக்கு கிடைக்கும் பெரும் ஆதரவுக்குப் பின்னால் வேறு ஒரு முக்கியமான காரணமும் இருக்கிறது. திரைத்துறையில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பல நடிகர்கள் அரசியலில் ஈடுபட்டும் அனைவராலும் வெற்றிப்பெற முடியவில்லை. சிலர் முதலமைச்சர் ஆனார்கள், வேறு சிலரால் தேர்தலில் வைப்புத்தொகையை தக்கவைத்துக் கொள்ளக்கூட முடியவில்லை. ஒரு நடிகர் அரசியலில் எந்த அளவுக்கு வெற்றிப்பெறுவார் என்பதை முடிவு செய்வதில் அவரது திரை பிம்பத்துக்கு சற்றும் குறையாத வகையில் அவரது ஊடக பிம்பமும் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டு அரசியலின் கடந்த நாற்பதாண்டு கால வரலாற்றை நோக்கினால் தமிழக ஊடகங்களின் வலுவான ஒரு பிரிவு ஒவ்வொருக் காலகட்டத்திலும் ஏதாவது ஒரு நடிகரின் தலைக்குப் பின்னே ஒளிவட்டத்தை ஏற்படுத்தி அவரை ஒரு மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவாக்க பெருமுயற்சி எடுத்துவந்திருப்பதைப் பார்க்கலாம். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் படித்தவர்கள் அரசியலுக்கு வந்தால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்ற மந்திரத்தை தொடர்ந்து ஓதிவரும் இந்த ஊடகப் பிரிவினர் தான் பாமர ரசிகர்களின் அறியாமையையே தங்கள் பலமாகக் கொண்ட நடிகர்களுக்கு கொம்புசீவி விடுபவர்கள்.

இந்த ஊடகங்கள் தாங்கள் வெறுக்கும் ஒருவகை அரசியலை - தமிழ் தேசியவாத சிந்தனை, 'உயர்'சாதி ஆதிக்க எதிர்ப்பு, கடவுள் மறுப்பு போன்ற கூறுகளை ஏதாவதொரு விகிதத்தில் கொண்ட அரசியலை - ஒழித்துக்கட்ட மற்ற அனைத்து வழிகளையும் கையாண்டுப் பார்த்து பலனில்லாத நிலையில் பாமர மக்களின் திரைப்பட மோகத்தை பயன்படுத்திக் கொள்கின்றன. இவர்களின் ஆதரவு எல்லா நடிகர்களுக்கும் கிடைப்பதில்லை, சில குறிப்பிட்டத் தகுதிகள் உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.

1. ஆதரவு பெறும் நடிகர் எந்நிலையிலும் தமிழ் தேசியவாதம் பேச முடியாதவராக இருக்கவேண்டும். மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட எம்.ஜி.ஆரும், மராட்டியரான ரஜினிகாந்தும், வீட்டில் தெலுங்கு பேசுபவராக அறியப்படும் விஜய்காந்தும் ஒருபோதும் தமிழ் தேசியவாத அரசியலை முன்னெடுக்க முடியாது. மேலும் அவர்கள் தங்கள் பின்புலம் காரணமாக வரும் தமிழ் தேசியவாதிகளின் எதிர்ப்பை எதிர்கொள்ள இந்திய தேசிய அடையாளத்தை தீவிரமாக வலியுறுத்தவேண்டியக் கட்டாயத்துக்கு உள்ளாவார்கள். இந்தித் திணிப்பு எதிர்ப்பு, மாநில சுயாட்சி போன்ற நிலைபாடுகளைப் பொறுத்தவரை எழுபதுகளிலும் எண்பதுகளிலும் கருணாநிதி காட்டிய தீவிரத்தில் நூற்றில் ஒரு பங்கைக் கூட எம்.ஜி,ஆர் வெளிப்படுத்தியதில்லை. ஆட்சிக்கு வந்த உடனேயே தன் கட்சிப் பெயருக்கு முன்னால் 'அகில இந்திய' என்றொரு முன்னொட்டை சேர்த்துக்கொண்டார். ரஜினிகாந்தால் காவிரி நீருக்காக தமிழக நடிகர்கள் நடத்தும் ஒரு பேரணியில் கூட கலந்துக்கொள்ள முடியாது. விஜய்காந்த் தமிழக பள்ளிகளில் இந்தி கற்பிப்பதை ஆதரித்துப் பேசுகிறார். இரு வாரங்களுக்கு முன் ஒரு இணையக் கட்டுரையில் படித்ததைப் போல ஊடகங்களின் அமோக ஆதரவுடன் திமுகவை உடைத்து தனிக்கட்சி தொடங்கியவர்கள் அனைவருமே - ஈ.வி.கே சம்பத்(கன்னடம்), எம்.ஜி.ஆர்(மலையாளம்), வைகோ(தெலுங்கு) - தமிழல்லாத ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்பது தற்செயலானதா என்றுத் தெரியவில்லை.

2. பிற்படுத்தப்பட்டோருக்கு ஆதரவாக 'உயர்'சாதி ஆதிக்க எதிர்ப்பு அரசியலில் ஈடுபடும் வாய்ப்பு இல்லாதவர்களாக இருக்கவேண்டும். எண்ணிக்கைப் பலம் கொண்ட தேவர், வன்னியர், நாடார் போன்ற பிற்பட்டத் தமிழ் சாதிகளைச் சேர்ந்த நடிகர்கள் தங்கள் சமூக ஆதரவைத் தக்கவைத்துக்கொள்ள அத்தகைய அரசியலை மேற்கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதால், அவர்களுக்கு ஊடக ஆதரவு கிடைக்காது. எம்.ஜி.ஆருக்குக் கிடைத்த ஆதரவு 'என் தமிழ் என் மக்கள்' என்ற வசனத்துடன் தனிக்கட்சி தொடங்கி கள்ளர் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ள தொகுதியில் போட்டியிட்ட சிவாஜிக்கு கிடைக்காது. (எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்த பின் 'உயர்'சாதியினருக்கு ஆதரவானதாக கருதப்பட்ட சில நடவடிக்கைகளை எடுத்தது கவனிக்கத்தக்கது. சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறையை மாற்றி பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த முயன்றதை ஒரு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். அதன் காரணமாக நாடாளுமன்ற தேர்தலில் மிக மோசமான தோல்வியை சந்தித்தப் பிறகே பிற்படுத்தப்பட்ட/தலித் மக்களுக்கான மொத்த இட ஒதுக்கீட்டை 69% ஆக உயர்த்தினார்.) தொண்ணூறுகளில் ரஜினிக்கு கிடைத்த ஆதரவும், கடந்த தேர்தலில் விஜய்காந்துக்கு கிடைத்த ஆதரவும் சரத்குமார், கார்த்திக் போன்றவர்கள் தனிக்கட்சி தொடங்கி தீவிர அரசியலில் இறங்கினால் கிடைக்காது.

3. கடவுள் மறுப்புக் கொள்கை உடைய நடிகர்களுக்கு இந்த ஊடகங்கள் ஒருபோதும் ஆதரவளிக்காது. ரகசியமாக மூகாம்பிகை கோயிலில் வழிபடுபவராக அறியப்பட்ட எம்.ஜி.ஆரும், இமயமலையில் இரண்டாயிரம் வயதுப் பெரியவர்களிடம் ஆன்மீகம் பயிலும் ரஜினியும், ஜோதிடர்களின் சொற்படி ஒவ்வொரு அடியையும் எடுத்துவைப்பதாக சொல்லப்படும் விஜய்காந்தும் பாதுகாப்பானவர்கள். கமலஹாசனோ சத்யராஜோ கட்சி ஆரம்பித்தால் ஊடக ஆதரவு கிடைப்பது சந்தேகமே.

மேலே உள்ள தகுதிகள் எல்லாம் ஜெயலலிதாவுக்கும் உண்டு என்றாலும் அவர் தன் திரைப் பிம்பத்தையும் ரசிகர்களையும் ஊடக ஆதரவையும் மட்டும் பயன்படுத்தி முன்னேறியவர் அல்ல. மாறாக எம்.ஜி.ஆரால் முன்னிலைப்படுத்தப்பட்டு அவரது மறைவுக்குப் பின் நன்கு வளர்ந்த நிலையில் இருந்த ஒரு கட்சியை கைப்பற்றிக் கொண்டவர்.

ஆக, தமிழக அரசியலில் நடிகர்கள் பெறும் முக்கியத்துவத்துக்கு பாமரத் தமிழர்களின் திரைப்பட வெறி மட்டும் காரணமல்ல. ஊடகங்களின் செயற்பாடுகளும் ஒரு முக்கிய காரணம். இன்னும் ஒரு பதினைந்து ஆண்டுகள் கழித்து வேறு ஏதாவது ஒரு நடிகருக்கு இதே ஊடகங்கள் கொம்புசீவிக் கொண்டிருந்தால் அவரும் மேலே சொன்ன தகுதிகளைக் கொண்டவராகத் தான் இருப்பார்.

-நன்றி கைமண் அளவு இனையதளம்.

Comments

Popular posts from this blog

ஒளவையாரின் ஆத்திச்சூடி

1. அறம் செய விரும்பு எப்பொழுதும் நல்ல காரியங்களை மட்டுமே செய்வதற்கு ஆசைப்பட வேண்டும். மறந்தும் மனதால்கூட மற்றவர்களுக்கு கெடுதல் தரும் விஷயங்களைப் பற்றி நினைக்கக் கூடாது. 2. ஆறுவது சினம் கோபம் கொள்ளக் கூடாது. கோபத்தைத் தணிக்க வேண்டும். கோபத்தைக் குறைக்க வேண்டும். கோபம் வரும்போது பேச்சைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அப்போது எடுக்கும் எந்த முடிவும் சரியாக இருக்காது. கோபம் குறைந்த பிறகு ஆற அமர யோசித்து எடுக்கும் முடிவே சரியாக இருக்கும். எனவே கோபத்தைக் குறைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. கோபம் கொள்ளாமல் இருப்பது அதைவிட சிறப்பாக இருக்கும்.   3. இயல்வது கரவேல் நம்மால் இயன்றதை ஒளிக்காமல் மறைக்காமல் செய்ய வேண்டும். செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்ட பிறகு அதை ஏன் மறைக்க வேண்டும்? அது மட்டுமல்ல. செய்ய நினப்பதை உடனே செய்துவிட வேண்டும். அதை ஒத்திப் போட்டால் பிறகு அதை செய்வதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடக் கூடும். எனவே நம்மால் முடிந்ததை உடனடியாக செய்து விட வேண்டும். அதையும் யாருக்கும் தெரியாமல் மறைக்காமல் செய்து விட வேண்டும். 4. ஈவது விலக்கேல் பிறருக்கு உதவி செய்வதைத்

பூம்புகார் நகரின் சிறப்பு

      தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்று பொய் சொல்லப்பட்டது. 1990-களில், குசராத்தில் உள்ள த ுவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது

தொண்டைமானாறு:

தொண்டைமானாறு என்ற பெயரை கேட்டதும் யாழ்பாண குடாநாட்டின் வடகரையில் தொண்டைமானாறு என்ற ஊரும், ஊரின் தென்கோடியில் உள்ள செல்வச்சந்நிதி என்ற இனிய பெயரை உடைய முருகன் ஆலயமும் இந்த இடங்களைத் தெரிந்த ஒருவரின் மனக்கண்முன் தோன்றும். தொண்டைமானாறு என்னும் இவ்விடத்திற்கு பெயர் வரக்காரணம் , தொண்டைமான் மன்னர் ஒருவரின் ஆட்சியின் கீழ் இவ்விடம் இருந்ததே காரணம். இங்கே வந்த தொண்டைமான் அரசன் யார் ?அவன் தமிழ்நாட்டில் எந்த இடத்தில் இருந்து வந்தான் ? எப்போது இங்கு வந்தான் ? வந்த தொண்டைமான் அரசன் என்ன செய்தான் ? போன்ற பல கேள்விகள் நமக்கு எழும். இதற்கான  பதிலை இலங்கை வரலாற்று ஆசிரியர்களால் ஆராய்ந்து எழுதப்பட்ட "தொண்டைமானாரும்  செல்வச்சநிதியும்" என்னும் நூலில் உள்ள செய்தியை உங்களுக்காக இங்கு பகிர்கிறேன். நூல் : தொண்டைமானாரும் செல்வச்சநிதியும் ஆக்கியோன் : சே.நாகலிங்கம் வெளியீடு :  வல்வை வரலாற்று ஆவண காப்பகம் கெனடா தாய்நாட்டுத்  தமிழர்களின் வரலாற்றை பார்க்கும் போது, அங்கே கிபி இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் காஞ்சிபுரத்தை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த தொண்டைமான் இளந்திரையனும் அவனை தொடர்ந்து , தம