இன்றைக்குச் சரியாக நூறாண்டுக்கு முன்பு, 1905 ஜனவரி 1ஆம் தேதியன்று, விழுப்புரத்தையடுத்தப் பனைமலை கிராமத்துக்கு வந்த பிரெஞ்சுப் பேராசிரியரும், சென்னை தொல்லியல்துறை அதிகாரியு மான ழுவோ துப்ராய் அவர்கள், அங்குள்ளக் குன்றின் மீது ஏறி நின்று பார்க்கிறார். வியந்து போகிறார்.
அங்கிருக்கும் சிவாலயம், காஞ்சி கைலாசநாதர் கோயிலை ஒத்திருக் கிறது.
ஏற்கனவே, 1890இல் பனைமலைக் கோயிலின் சமஸ்கிருதக் கல்வெட்டுகளைப் படித்த, ஆய்வறிஞர் ஹுல்ஷ், சில ஐயங்களை எழுப்பியிருந்தார்.
இப்போது அவற்றிற்கு விடை கண்டார் ழுவோ துப்ராய்.
காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டிய பல்லவ மன்னன் இராஜ சிம்மன்தான், பனைமலைக் கோயிலையும் கட்டியிருக்கிறான்.
பிரெஞ்சுப் பேராசிரியரின் ஆய்வு, பனைமலை தாளகிரீசுவரர்க் கோயிலையும், அங்குள்ள ஓவியத்தையும் வெளியுலகுக்குக் கொண்டு வந்தது.
பனைமலைக் கோயிலின் வடக்கு சிற்றாலயத்தில், இடம்பெற்றுள்ள ஓவியம் அழகானது.
மகுடம் தரித்தத் தலைக்கு மேல் வண்ணக் குடை, ஒரு கால் தரையில் ஊன்றியிருக்க மற்றொரு காலை மடித்து தலையை சாய்த்து, அழகிய அணிகலன் களுடன் காட்சித் தருகிறாள் உமையம்மை.
(இவ்வோவியம் பல்லவனின் அரசியாகிய அரங்க பதாகை என்போரும் உண்டு)
எதிர்ச் சுவற்றில் சிவபெருமானின் சம்ஹார தாண்டவம். அதனை இரசிக்கும் பார்வதி. இப்படியாக உருப்பெற்றுள்ளது இந்த ஓவியம்.
சிவனின் சம்ஹார தாண்டவ ஓவியம் முற்றிலும் சிதைந்துவிட்ட நிலையில், பார்வதி தேவியின் ஓவியம் மட்டும் ஓரளவு நின்றிருக்கிறது.
பனைமலை ஓவியம், தென்னிந்திய ஓவியக் கலை மரபில் அஜந்தா எல்லோராவுக்கு அடுத்த நிலையில் இருப்பது. தமிழகத்தில் எஞ்சி நிற்கும் பல்லவ ஓவியம். இலங்கை சிகிரியா மலைக் குன்றில் உள்ள ஓவியங்களுடன் ஒப்பிடக் கூடியது.
இவ்வோவியத்தின் சிறப்பு குறித்து ஆய்வாளர்கள் பலரும் வரலாற்றில் பதிவு செய்துள்ளனர்.
பனைமலை ஓவியத்தின் மாதிரி பிரதி ஒன்று, சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறார் மயிலை சீனி.வேங்கடசாமி.
இவ்வருங்காட்சியகத்தில் ஓவியர் இரவி வர்மா உள்ளிட்டோரின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மகிழ்ச்சிதான். ஆனால், பனைமலை ஓவியப் பிரதி எங்கே?
அண்மையில் இரண்டுமுறை சென்னை அருங்காட்சியகத்துக்குச் சென்ற நான், பனைமலை ஓவியப் பிரதி குறித்து கேட்டபோது, அங்கிருந்தவர்கள் உதட்டைப் பிதுக்கியதுதான் பதிலாக வந்தது. அது எங்கிருக்கிறதோ யாருக்குத் தெரியும்?
பாரீசு நகரத்து லூவர் அருங்காட்சியகத்துச் சென்றிருந்த விமர்சகர் ஓவியர் கவிஞர் இந்திரன் அவர்கள், அங்கிருந்த மோனோலிசா ஓவியம், குண்டு துளைக்காத கண்ணாடிகளின் பல்வேறு அடுக்குகளால் பாதுகாக்கப்பட்டு வருவதைப் பார்த்து வியந்தார்.
இதற்கும் பல நூறாண்டுகளுக்கு முன்பு தமிழ் மண்ணில் தீட்டப்பட்ட ஓவியங்களையும் செதுக்கப்பட்டச் சிற்பங்களையும் எத்தகைய பாதுகாப்பற்ற நிலையில் நாம் வைத்திருக்கிறோம் என்றெண்ணி வேதனைப்பட்டாராம்.
கலையுலகில் மோனோலிசா மிகவும் புகழப்படுகிறாள். உச்சி முகர்ந்துப் பாராட்டப் படுகிறாள். இருக்கட்டும்.
மோனாலிசாவை விட பல நூற்றாண்டுகளுக்கு முந்தையவள், ஆனால் இன்றும் இளமையாய் இருப்பவள், அழகானவள் எங்கள் உமையம்மை.
இப்படி நாங்கள் இறுமாந்துச் சொல்லலாம். இதில் உண்மையும் நியாயமும்கூட இருக்கிறது.
ஆனால் பாதுகாப்பும் இல்லை. பராமரிப்பும் இல்லை. அந்த வடக்குச் சிற்றாலயத் துக்குப் பூட்டுக்கூட கிடையாது. தமிழ்நாட்டில் வாயில் களைப் போல் திறந்தே கிடக்கிறது. இதன் அருமை குறித்துச் சொல்வ தற்கும் அங்கு ஆள் கிடையாது.
ஒருவேளை பிரெஞ்சுக்காரர்கள் செஞ்சியில் இருந்ததைப் பெயர்த் தெடுத்துச் சென்றதைப் போல, பனைமலை ஓவியத்தையும் எடுத்துச் சென்று பாரீசு அருங்காட்சியகத்தில் வைத்திருந்தால்,
மோனோலிசாவை விட உமையம்மைக்குப் பல அடுக்குப் பாதுகாப்புத் தரப்பட்டிருக்கும்- தமிழனின் ஓவியக் கலையும் உலகளாவியப் பெருமையும் அடைந்திருக்குமோ?
Comments
Post a Comment
உங்களின் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கும்